முகவரி இல்லாத ஒரு கடிதம்..
உன்னை விளிப்பதற்கு என்னிடம் ஆயிரம் வார்த்தைகள்; ஆயினும் அவற்றை பிரயோகிக்கும் தகுதி இல்லாத காரணத்தால்.....
பிரியமுள்ள தோழிக்கு,
இதோ.. 'பிரிவு' என்னும் நீங்கா துயர் நம்மை பீடிக்க காத்திருக்கும் வேளையில், உன்னால் நிரப்பப்பட்ட என் வாழ்க்கை புத்தகத்தின் கடந்த கால பக்கங்களை புரட்டி பார்க்கிறேன்.
'உன் பெயர்'.. என் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயமும் இந்த வார்த்தையில் தான் தொடங்கி இருக்கிறது. என் எதிர் காலத்தை மறைத்து வைத்து, அந்த இறைவன் ஆடிய கண்ணாம்பூச்சி ஆட்டத்தில், என் கரம் பிடித்து என்னை வழி நடத்திய தேவதை நீ... என் சுயம் தொலைத்து நான் எழுதிய கண்ணீர் கவிதைகளுக்கு நீ மட்டும் தான் மௌன சாட்சி. என் கண்ணீருக்கும் புன்னகைக்குமான இடைவெளியில் நிறைந்து நிற்பதுவும் நீ தான்..
எப்போதிருந்து உன்னைக்கொண்டு நான் ஆசிர்வதிக்கப் பட்டேன்? நினைவில் இல்லை. உன் விரல் நுனியால் என் வலி விரட்டும் வித்தை எங்கே கற்றாய்? வாழ்வில் தொலைந்தவனை மீண்டும் தேட வைத்தாய்..மனிதம் கற்றுத் தந்தாய்.மல்லிகைக்கு மயங்க வைத்தாய்.. நான் அறியாதார்க்காகவும் அழக் கற்றுக் கொடுத்தாய். நிலவை பின் தொடர்ந்து நடக்கும் ஒரு குழந்தையை போல், என் பயணம் எதுவானாலும் அதன் இலக்கு நீயானாய்..
இதோ என் நிகழ்காலம். இந்த விசித்திர இறைவன், என் அதிர்ஷ்டம் பறித்து, உன் மணமாலை கட்டுகிறான்..முகம் தெரியாத 'அவரு'டனான உன் பயணத்திற்கு நீ தயாராகி விட்டாய். உன்னோடு வருவதற்காய் முயற்சிக்கிறேன்; தந்தையின் கைப்பிடியை விடுவிக்க போராடும் ஒரு பேருந்து நிலைய குழந்தையாய்.. இந்த விதித் தந்தை இரக்கமற்றவன்.. என் அழுகைக்கும் மௌனமாய் புன்னகைக்கிறான்....

'தனிமை'.. எனக்கு புதிதாய் விதிக்கப் பட்ட நண்பன். உன் நினைவுகளின் படிமங்கள் என் வழியெங்கும் இறைந்து கிடக்க, அவ்வப்போது அவற்றில் இடறி விழுந்து; எழுந்து, தொடர்கிறது என் பயணம். கற்றுக்கொள்வதற்கு கடினமாகத்தான் இருக்கிறது இந்த வாழ்வியல் பாடம். மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன், உன் விரல் தேடி நடுங்கும் கரங்களுடன். மௌனமாய் நடக்கிறேன், நம் சாலைகள் என்றாவது ஒரு நாள் சந்திக்கும் என்ற நம்பிக்கையுடனும், உனக்காய் இன்னும் மிச்சமிருக்கும் என் பிரார்த்தனைகளுடனும்....
-வந்திய தேவன்


