26 January 2006

முகவரி இல்லாத ஒரு கடிதம்..

உன்னை விளிப்பதற்கு என்னிடம் ஆயிரம் வார்த்தைகள்; ஆயினும் அவற்றை பிரயோகிக்கும் தகுதி இல்லாத காரணத்தால்.....

பிரியமுள்ள தோழிக்கு,

                   இதோ.. 'பிரிவு' என்னும் நீங்கா துயர் நம்மை பீடிக்க காத்திருக்கும் வேளையில், உன்னால் நிரப்பப்பட்ட என் வாழ்க்கை புத்தகத்தின் கடந்த கால பக்கங்களை புரட்டி பார்க்கிறேன்.
                    'உன் பெயர்'.. என் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயமும் இந்த வார்த்தையில் தான் தொடங்கி இருக்கிறது. என் எதிர் காலத்தை மறைத்து வைத்து, அந்த இறைவன் ஆடிய கண்ணாம்பூச்சி ஆட்டத்தில், என் கரம் பிடித்து என்னை வழி நடத்திய தேவதை நீ... என் சுயம் தொலைத்து நான் எழுதிய கண்ணீர் கவிதைகளுக்கு நீ மட்டும் தான் மௌன சாட்சி. என் கண்ணீருக்கும் புன்னகைக்குமான இடைவெளியில் நிறைந்து நிற்பதுவும் நீ தான்..
                     எப்போதிருந்து உன்னைக்கொண்டு நான் ஆசிர்வதிக்கப் பட்டேன்? நினைவில் இல்லை. உன் விரல் நுனியால் என் வலி விரட்டும் வித்தை எங்கே கற்றாய்? வாழ்வில் தொலைந்தவனை மீண்டும் தேட வைத்தாய்..மனிதம் கற்றுத் தந்தாய்.மல்லிகைக்கு மயங்க வைத்தாய்.. நான் அறியாதார்க்காகவும் அழக் கற்றுக் கொடுத்தாய். நிலவை பின் தொடர்ந்து நடக்கும் ஒரு குழந்தையை போல், என் பயணம் எதுவானாலும் அதன் இலக்கு நீயானாய்..
                      இதோ என் நிகழ்காலம். இந்த விசித்திர இறைவன், என் அதிர்ஷ்டம் பறித்து, உன் மணமாலை கட்டுகிறான்..முகம் தெரியாத 'அவரு'டனான உன் பயணத்திற்கு நீ தயாராகி விட்டாய். உன்னோடு வருவதற்காய் முயற்சிக்கிறேன்; தந்தையின் கைப்பிடியை விடுவிக்க போராடும் ஒரு பேருந்து நிலைய குழந்தையாய்.. இந்த விதித் தந்தை இரக்கமற்றவன்.. என் அழுகைக்கும் மௌனமாய் புன்னகைக்கிறான்....

                    'தனிமை'.. எனக்கு புதிதாய் விதிக்கப் பட்ட நண்பன். உன் நினைவுகளின் படிமங்கள் என் வழியெங்கும் இறைந்து கிடக்க, அவ்வப்போது அவற்றில் இடறி விழுந்து; எழுந்து, தொடர்கிறது என் பயணம். கற்றுக்கொள்வதற்கு கடினமாகத்தான் இருக்கிறது இந்த வாழ்வியல் பாடம். மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன், உன் விரல் தேடி நடுங்கும் கரங்களுடன். மௌனமாய் நடக்கிறேன், நம் சாலைகள் என்றாவது ஒரு நாள் சந்திக்கும் என்ற நம்பிக்கையுடனும், உனக்காய் இன்னும் மிச்சமிருக்கும் என் பிரார்த்தனைகளுடனும்....

                                                             -வந்திய தேவன்

15 January 2006

வரம் வேண்டும்...















என் அதிகாலை பொழுது
உன் சமையலறை
சப்தங்களில் விடியும்...
புரண்டு படுப்பேன்..
என் போர்வைக்குள் மிச்சமிருக்கும்
உன் மூச்சுக்காற்றை
சுவாசித்துக்கொண்டு..

"எழுந்திருங்க குட்டி"
காதோரம் கிசுகிசுப்பாய்
உன் தேவதை மொழியில்...
இமைகளை திறக்காமல்
உன் கரம் பற்றி நான் இழுக்க...
விடுங்க என்று நீ சிணுங்க..
நாணத்தில் காதல்
கண் மூடிக் கொள்ளும்..

விவஸ்தை இல்லா
சமையலறை...
விசிலடித்து உனை அழைக்க
என் அறைக்குள்
உன் கூந்தல் மணம் நிரப்பி
காணாமல் போவாய்..

கடவுளுக்கு நெருங்கியவர்களே!
எனக்காக வாங்கி தாருங்கள்..
ஒரு நாளுக்கு
இரண்டு முறை
என் தேவதையால்
எழுப்பப்படும் வரம்...
                                                    -வந்திய தேவன்

09 January 2006

ஊடுதல் காமத்தி...













பிறக்காத குழந்தைக்கு
பெயர் வைப்பதில் தொடங்கும்..
நமக்கிடையேயான ஊடல்..

திசைக்கு ஒருவராய்
இருவரும் திரும்பி நிற்போம்..
மௌனத்தால் நம் அறைதனை
நிரப்பி அதில் சில
மணித்துளி கரைப்போம்...

உன் நீண்ட நேர மௌனம்..
'விட்டுக் கொடுத்தலை' எனக்கு உபதேசிக்கும்..
தோற்பதற்க்காய் திரும்ப
நினைக்கும் வேளையில்
காற்றாய் வந்து
என் காது கடிப்பாய்...
அடுத்து நீ செய்யப் போகும்
போருக்கான ஆயத்தமாய்...

வள்ளுவன் இருந்திருந்தால்
வாழ்த்தியிருப்பான் நம்மை...
அவன் படைப்பின்
கடைசி பக்கம்
காட்சியாவதை கண்டு..
                               -வந்திய தேவன்

03 January 2006

ரசிக தேவனின் மயக்கம்...

இதோ இன்னொரு புத்தாண்டு! என்னை சுற்றி நடந்து முடிந்த கொண்டாட்டங்களை பார்த்து சற்றே மிரண்டு போனேன்.. ஒரு மயான அமைதியை தனக்குள் மறைத்து வைத்திருக்கும், இந்த நகரத்தின் இரைச்சலுக்குப் பயந்து அறைக்குள் முடங்கினேன். நண்பனின் தயவால் கிடைத்த 'அன்பே சிவம்' குறுந்தகடு கண்ணில் பட்டது. ஒரு சராசரி பிரம்மச்சாரியின் உந்துதலோடு, விளக்கினை அணைத்து விட்டு 'அன்பே சிவத்தை' தேட ஆரம்பித்தேன்.


                                      ஏற்கனவே பார்த்ததாய் இருந்தாலும், இந்த முறை இது ஏற்படுத்திய பாதிப்பு அதிகமாகவே இருந்தது. கமல் என்ற ஒரு தனி மனிதன் மீதான என் பார்வை வேறாக இருந்தாலும்,அவரது நடிகன் என்ற பரிமாணத்தின் மீது எனக்கு நிறையவே மதிப்பு உண்டு. அவரது சோதனை முயற்சிகள் தோற்றுப் போகும் போது, தமிழ் திரைப்படங்களுக்கு ஏற்படும் ஒரு பின்னடைவினை உணர்ந்திருக்கிறேன். திரைப்படங்களின் சமூக விளைவுகள் பற்றி 'மாலடிமை'கள் மேடை தோறும் முழங்கி வரும் இந்த கால கட்டத்தில், 'அன்பே சிவம்' எந்த மாதிரியான சமூக பாதிப்பை ஏற்படுத்தியது? தெரியவில்லை! ஒரு கம்யூனிச பிரச்சார படமாக முதலில் தோன்றினாலும், நாம் மனிதம் தொலைக்கும் தருணங்களை துல்லியமாக எடுத்துக் காட்டத் தவறவில்லை. மதனின் திரைப்பட பங்களிப்பில் நிச்சயம் இந்த படம் ஒரு மைல் கல். அவரது வசனங்களில் வெளிப்படும் ஒரு சமூக அக்கறையும், அதை மிகைப் படுத்தாமல் வெளிப்படுத்திய கமலின் அசாத்திய முக பாவனைகளும்... நிச்சயமாய் என்னிடம் விவரிக்க வார்த்தை இல்லை. தாடையில் வலி மாற்றி பேசும் போது, விபத்தில் சிக்கி உருமாறிப் போன ஒரு மனிதனை நம் கண் முன் நிறுத்தும் 'நல்ல சிவம்'... அந்த வருட தேசிய விருது பட்டியலில் இல்லை.. "தேசிய விருதுகள் திரை மறைவில் நிர்ணயிக்கப் படுகின்றன". இப்போது நம்புகிறேன்.
                     ஒரு மிக சிறந்த மகனாய், ஒரு அன்பான கணவனாய் பொறுப்புள்ள தந்தையாய்... நமக்கு கொடுக்கப் பட்ட பாத்திரங்கள் அத்தனையிலும் நாம் சிறப்பாய்.... இருந்தும் இந்த திரைப்படம் பார்த்த பின்னர் ஏதோ ஒரு உறுத்தல்... சமுகத்தின் பாலான நமது பொறுப்புகளில் எங்கோ தவறுகிறோம்.? நம்மை சுற்றியதான, நம் அன்பை பரிமாறும் எல்லை மிக சுருங்கியதாய்.. தேடலை மட்டுமே நோக்கியதான நம் பயணத்தில் நம்மை அறியாமல் தொலைக்கும் உணர்வுகள் ஏராளமாய்.. இந்த திரைப்படம் கம்யூனிசத்தின் மீதான என் ஆர்வத்தை அதிகப் படுத்தி விட்டது.
                           இந்த திரைப்பட பார்வையாளர்களில் யாராவது ஒருவர், திரை அரங்கை விட்டு வெளியே வரும் போது, அடுத்தவருக்கு வழி விடும் பொறுமையை கைக்கொண்டிருந்தால், அதுவே இந்த திரைப் படத்தின் மிகப் பெரிய வெற்றி!!
                      திரைக் கதையில் காட்டிய கவனத்தை , கிரணின் தொப்புளில் காட்ட கமல் மறந்து விட்டதால்.. தமிழ் ரசிக கண்மணிகள் 'சகலகலாவல்லவனை' மீண்டும் எடுக்கும் தண்டனையை கமலுக்கு வழங்கி தீர்ப்பளித்து விட்டார்கள்..
                               -வந்திய தேவன்