27 December 2005

'நீ.....'

மொழி புரியா
பேருந்து பயணம்..
இப்போதெல்லாம்
உன்னிடம் தனிமையில் பேசி..
தாய் மொழி காக்கிறேன்..

நமக்கிடையேயான வணிகத்தில்
நீ எப்போதும் ஏமாளியாய்!!
என் சோகம் பெற்று
புன்னகை விற்கிறாய்...


நீ சொல்லும் ஆறுதலுக்காகவே
அனேகம் முறை தோற்றிருக்கிறேன்..
என் அத்தனை வெற்றிகளிலும்
நான் அடைந்ததில்லை
இத்தனை ஆனந்தம்...



போலியான முகங்கள்..
அங்கீகரிக்கப்படாத உழைப்பு...
களைத்து விட்டேன் தோழி!!
இப்போதெல்லாம் எனக்கு தேவை..
மிதமாய் காய்ச்சல்..
போர்த்த ஒரு போர்வை...
என் தலை கோத உன் விரல்கள்..
சுருக்கமாய் சொன்னால்...
எனக்கு வேண்டும்
இந்த பூமியில் சொர்க்கம்...

                               -வந்திய தேவன்

எப்போதும் என்னுடன்....













என் கரங்களில்
புதைந்து நீ
உறங்கிய அந்த இரவுகள்..
அதிகாலை வேளையில்
இப்போதும் அனிச்சையாய்
இடப் பக்கம் உன்னை தேடுகிறேன்..

என் கழுத்தில் மறைந்து
கண்ணாடி முன் நீ
அழகு பார்த்த அந்த நிமிடங்கள்..
புன்னகை பூக்கிறேன்..
என் முகம் பார்க்கும் ஒவ்வொரு முறையும்..

என் கவிதைகளுக்கு
பரிசாய் தருவாய்..
உன் இதழின் ஸ்பரிஸம்..
கணப் பொழுதில் தோன்றி மறையும் கவிதைகள்
இப்போதெல்லாம் அடிக்கடி சிலிர்க்கிறேன்..

அதெப்படி உனக்கு மட்டும்
தெரிகிறது
என் தனிமை..
உடனே வந்து
என் நினைவுகளை
ஆக்கிரமிக்கிறாய்.....
                               -வந்திய தேவன்

எனக்கு பிடித்ததில்...













அடுத்த நொடி...
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
யாரோ நிர்ணயிக்க போகும்
என் விதி...

வியர்வை மழையில் பய குடை
திசை அறியாமல் திகைக்கிறேன்..
மின்னலாய் உன் நினைவு
திடீரென ஒரு
சுயம் உணர்தல்..

என் வலி
உனக்கு புன்னகை வாங்கி தரலாம்..
நான் சமைத்த காயங்களுக்கு
மருந்தாகலாம்...

நினைவுக் காற்றில்
பயக் குடை பறந்தது..
இதோ அடுத்த நொடிக்காய்..
பிரார்த்திக்கிறேன்
உன் காயங்களுக்கு
மருந்து கிடைக்க...
                               -வந்திய தேவன்

இறைவனின் பெயரால்.....

                 இப்போதும் தெரியவில்லை என்னை எழுத தூண்டியது எதுவென்று...இருந்த போதிலும் பிரார்த்திக்கிறேன் அது தொடர வேண்டும் என்று...
                     எதை பற்றி எழுதலாம்? என் சுய அறிமுகம் நிச்சயம் சலிப்பை ஏற்படுத்தும். என்னை பாதித்ததை பற்றி மட்டும் எழுத வேண்டும் என்று எப்போதோ எடுத்துக்கொண்ட உறுதிமொழி; இப்பொழுது நினைவு படுத்தி கொள்கிறேன். தடம் மாறி போன வாழ்க்கை பயணம், வடுக்களை ஏற்படுத்திய நிகழ்வுகள், மறக்க முடியாத மனிதர்கள்... அப்பாடா.. எழுதுவதற்க்கு ஏராளமாய்... நம்பிக்கையுடன் உளற ஆரம்பிக்கிறேன்..